Banner

என் அன்பான கணவருடன்
'பிடிக்குள் அடங்கா மெளனம்' புத்தக வெளியீட்டில் VIT வேந்தர்
சிறந்த நூலாசிரியருக்கான தமிழக அரசின் விருது
சாதனை பெண்கள் விருது 2020
VIT வேந்தரிடம் பெற்ற தமிழன்னை விருது
Guest motivational speech in Bharathi college

Saturday, June 14, 2014

சீன வானொலியில் நான் `` கோலம் `` பற்றி பேசிய பதிவு




ஆயகலை அறுபத்தி நான்கினுள்
சிறந்த கலை கோலம்
அற்புத காலைப் பொழுதை
இனிமை பொங்க வரவேற்கும்
அழகியதொரு அடையாளம்

நிலைப்படியோ தெய்வசன்னதியோ
பூஜையறையோ தெருவாயிலோ
தீட்டப்படும் கோலங்களை
தெய்வங்களும் விரும்பும்

புள்ளிகளோடு கோடுகளை
இணைக்கும் சூத்திரம் உரைத்து
அதிகாலைத் தொட்டே
தியானத்தை பழக்கும்

புள்ளிகள் சிவமாயும்
கோடுகள் சக்தியாயும்
ஒன்றுபட்டு உணர்த்துகிறது
நல்லதொரு இல்லறத்தை

சேதாரம் இல்லா அணிகலனாய்
அழகு சேர்க்கும் வாசலுக்கு
பாரம்பரியத்தின் அடையாளமாய்
மெருகூட்டும் பெண்மைக்கு

கலாசாரத்தை பறைசாற்றி
பண்பாட்டை பிரதிபலித்து
இறையுணர்வை வெளிப்படுத்தி
பூமித்தாய்க்கு செய்யும் ஒரு முதல் மரியாதை

அடுப்பு தாண்டி
பெண்களை கலைஞராக்கும்
அன்றாடம் ரசனை மிகுத்தி
வாழ்வில் ஆரோக்யம் கூட்டும்

நேர்மறை எண்ணங்களை
வாரிக் கொடுத்து
தேடுதல் துவக்கி
நேர்த்தியை கூட்டும்

அறிவியல்பூர்வ ஆதாயத்தின்
அவசியம் சொல்லி
உடற்பயிற்சி உத்தியை
உரக்கச் சொல்லும்

தீபாவளியும் பட்டாசும் போல
பிரிக்க முடியாத்து
பொங்கலும் கோலமும்

இளங்சிட்டுகள் வட்டமிட்டு
வண்ண வண்ண பொடிகளிட்டு
வானவில்லை வளைத்துப் போட்டு
வீதியிலே மண்டியிட்டு
குளிரை விரட்டி விட்டு
இதழ்களில் புன்னகையிட்டு
இடப்படுகிறது கோலம்

பலமணி நேர தூக்கத்தை
விழுங்கி ஏப்பம் விடும்
ஆயினும் அயர்ச்சியின்றி
மலர்ச்சியை மனதில் நிறைக்கும்

தெருவிளக்கின் புன்னகையில்
பேசப்படாத வார்த்தைகளை கொண்டிருக்கும்
பிறர் பேசிச் செல்வதை
மௌனியாய் நின்று ரசிக்கும்

நேர்புள்ளி ஊடுபுள்ளி
என வித்தியாசம் காட்டும்
இரட்டை இழை புள்ளி ரங்கோலி
என ரம்மியம் கூட்டும்

வளைவித்து நெளிவித்து
பெண்ணுக்கு பொறுமை சேர்க்கும்
இறுதி புள்ளி இட்டு நிரப்புகையில்
அவளுக்கு பெருமை கோர்க்கும்

புதுமைகளை புகுத்தி
புத்துணர்ச்சி ஏற்றும்
சமயத்தில் கருத்துச் சொல்லி
விழிப்புணர்வு ஊட்டும்

பொங்கலுக்கு நகரத்து பெண்களையும்
நறுவிசாக மெனக்கெட வைக்கும்
அடுக்குமாடி வாசிகளை மூன்று நாட்கள்
அங்கலாய்த்து ஏங்க வைக்கும்

எல்லைகளை விரிவாக்கி விரிவாக்கி
தினம் புது பிரசவத்தை நிகழ்த்தும் எங்கள் கோலம்