Banner

என் அன்பான கணவருடன்
'பிடிக்குள் அடங்கா மெளனம்' புத்தக வெளியீட்டில் VIT வேந்தர்
சிறந்த நூலாசிரியருக்கான தமிழக அரசின் விருது
சாதனை பெண்கள் விருது 2020
VIT வேந்தரிடம் பெற்ற தமிழன்னை விருது
Guest motivational speech in Bharathi college

Friday, January 28, 2011

அந்த தொழில்



      தாமரை இலை நீர் போல மல்லியின் மனமும்
செயலும் ஒட்டாமல் வேலை செய்து கொண்டிருந்தது.
இன்னும் எத்தனை நாளைக்குத் தான் காதிலிருந்ததையும்
கையிலிருந்ததையும் விற்று அரிசி பொங்குவது?

      கணவன் ராமுவின் இறப்பிற்கு அரசு கொடுப்பதாக
சொன்ன தொகை ஆறு மாதமாகியும் கைக்கு
வந்தபாடில்லை.உதவவும் வேறு ஆள் இல்லை.
விரக்தியின் உச்சத்தில் இரண்டு குழந்தைகளுடன்
தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம்
இளந்தூறலாய் அவ்வப்போது அவளை  நனைத்து
விட்டுச் சென்றது.அப்போது சரியாக வந்து
சேர்ந்தான் முனியன்.

        “என்ன மல்லி... நானும் எத்தனை தபா
சொல்றது...இன்னா முடிவு பண்ணின?தினம் இந்த
புள்ளைஙகள பட்டினி போட்டு சாவடிக்கப் போறியா?”

        “இல்ல...ஊரு என்ன சொல்லுமோன்னு
பயமா இருக்கு முனியா...”

        “ஊருக்கு பயந்தா...செத்துப்போன புருஷன் திரும்பி வரப்போறதில்ல.ஏற்கனவே பாத்த தொழிலு...
கல்யாணத்துக்கப்புறம் தானே வுட்டுட்ட...திருநா சமயம்.
உன்ன நம்பி பக்கத்து ஊரு நாட்டாமைகிட்ட அட்வான்ஸ்
வாங்கிட்டேன் புள்ள...இந்தா 300 ரூபா. நாளைக்கு சரியா 4
மணிக்கு ரெடியாயிரு,வந்து கூட்டினு போறேன்.”

       மறு நாள் மதியம் 2 மணியிலிருந்தே தன்னை
அலங்கரிக்க தொடங்கி விட்டாள் மல்லி. நீண்ட நாளாய்
பாலைவன மணல் போல் தோன்றியநெற்றியில்
சிவப்பு திலகம் இட்டாள்.

     கை நிறைய கண்ணாடி வளையல்களும் உதட்டுச்சாயமும்
இட்டுக்கொண்டாள்.பரண் மேலிருந்து பித்தளை சொம்பை
புளி சேர்த்து பளபளக்க தேய்த்து எடுத்தாள்.அதன்
உள்ளே 2 கிலோ பச்சரிசியைப் போட்டு குடத்தின் வாய்
பகுதியை ஒரு தேங்காய் வைத்து கட்டினாள்.குளத்து நீரில்
வளர்ந்த கிளச்சிக் கட்டை வேரை சுற்றி,அதன் மீது
செயற்கை பூ அலங் காரம் செய்து உச்சியில் இறக்கை
விரிக்கும் அன்னப்பறவையை நிறுத்தினாள்.

        ஜோடிப்பு முடிந்து 6 கிலோ எடை கொண்ட
முழுவடிவத்தை பெற்றது கரகம்.கரகத்தையும்
சலங்கையையும் ராமுவின் புகைப்படத்துக்கு
முன் வைத்து நமஸ்கரித்தாள்.முனியனும்
நேரத்துக்கு வந்துவிட குழந்தைகளைஅவன்
பொஞ்ஜாதியிடம் விட்டு திரும்பியவளுக்கு
இடியென வந்து விழுந்தது பொசுக்கும் மின்னல்
வார்த்தைகள்.

        ஆம்படையான் செத்து வருஷம் திரும்பல.
அதுக்குள்ள பொட்டச்சிக்கு பூவும் பொட்டும் ஆட்டமும்
தளுக்கும் மினுக்கும் கேக்குதோ”-சீறி வெடித்தாள்
மாமியார் செண்பகம்.

       களுக்கென நீர் எட்டிப் பார்த்தது மல்லியின் கண்களில்.
அவளுக்கு பதில் பேசாமல்,முறைத்து ஒரு பார்வை பார்த்து
புறப்பட்டே விட்டாள்மல்லி,அந்த கிராமத்தின் பொட்டு
வைத்த முதல் கைம்பெண்ணாய்.


 நன்றி : தினமலர்-பெண்கள்மலர்

Tuesday, January 25, 2011

வேலை



    வேலைக்கு ஆள் எடுக்கும் தேர்வு.சுறுசுறுப்பாக
இயங்கிக்கொண்டிருந்தாள் நிர்வாக அதிகாரி வித்யாவதி.
மூன்று இளைஞர்கள் எல்லாக் கேள்விகளுக்கும்
பதிலளித்துத் தேர்வாகினர்.தகுதிகளும் சரிசமம்!

       மூவரில் ஒருவரை எப்படித் தேர்ந்தெடுப்பது
என விழிபிதுங்கினாள்.

      இறுதியாக மூன்று பேருக்கும் ஐந்து கூடைகள்
நிறைய ரோஜாவை எண்ணும் பணி கொடுக்கப்பட்டது.
ஏன் இந்தப் பணி எனத் தெரியாமலேயே மூவரும்
செவ்வனே எண்ணி முடித்தனர்.அவரவர் நண்பர்களை
அவர்களிடம் பேசவிட்டு உன்னிப்பாய் ம்றைந்து
கவனிக்கலானாள் வித்யாவதி.

       “டேய்,இந்த வேலைக்கு இந்தப்பூவையெல்லாம்
எண்ணித் தொலைக்கணும்னு என்தலையெழுத்தைப்
பாருடா”-இது முதலாமவன்.

       “வேற வேலை கிடைக்கற வரைக்கும்இந்தக்
கோமாளித்தனத்தை செஞ்சுதானே ஆகணும்
வயித்துப்பாட்டுக்கு”-இது இரண்டாமவன்.

       “பூக்களைத் தொட்டு எண்ணும்போது
ஏற்பட்ட உணர்வும் வாசமும் ஒருவித புதுத் தெம்பைக்
கொடுத்துச்சு.ரொம்ப ரசிச்சுச் செஞ்சேண்டா”-இது
மூன்றாமவன்.

       மூன்றாமவனுக்கே கிடைத்தது வேலை!


 நன்றி  :  கல்கி

தனிக்குடித்தனம்



         டெலிபோனில் உணர்ச்சிப்பிழம்பாய்
குமுறிக் கொண்டிருந்தாள் ஜானகி...

     ”என்னங்க...ரெண்டு வீட்லயும் நம்மைப்பிரிச்சு
வெச்சது போதும்.இனிமே ஒரு நிமிஷம் கூட என்னால
உங்களை விட்டு பிரிஞ்சிருக்க முடியாது!”
“எனக்கு மட்டும் உன்னை விட்டு பிரிஞ்சிருக்க ஆசையா?
என்ன பண்றது,வீட்டு சூழ்நிலை...”

       “என்ன பெரிய சூழ் நிலை? நமக்கு இந்த சொந்த பந்தம்
எதுவும் தேவையில்ல. நம்ம உணர்ச்சிகளைபுரிஞ்சுக்காத
இவங்களுக்காக நாம ஏன் பிரிஞ்சிருக்கணும்? நாம
தனிக்குடித்தனம் போயிடுவோம்!”

        “என்னது...தனிக்குடித்தனமா?”

        ”ஏன் பயப்படுறீங்க?”

       “ஊர் அசிங்கமா பேசாதா?”

       “பேசினா பேசிட்டு போகட்டும்.ஊருக்காகவா நாம
வாழறோம்?உங்களப் பார்க்காம்,உங்களோட பேசாம
வாழறது ஒரு வாழ்க்கையா?வீட்ல நீங்க பேசறீங்களா,
நான் பேசட்டுமா?”

      “சரி... நானே பசங்ககிட்ட பேசறேன்.

   இதுவரைக்கும் நீ பெரியவன்கிட்டயும் நான் சின்னவன்கிட்டயும்
இருந்ததெல்லாம் போதும்.எனக்கு வர்ற பென்ஷன்ல
நிம்மதியா வாழலாம்.வேலைக்கு போற ரெண்டு மருமகளுக்கும்
தான் கஷ்டமா இருக்கும்.இருக்கட்டும்...
   இனியும் உன்னை நான் கஷ்டப்படுத்தினா, நாம
 நாற்பத்தங்சு வருசமா சேர்ந்து வாழ்ந்தவாழ்க்கைக்கு
அர்த்தம் இல்லாம போயிடும்.சீக்கிரமே தனி வீடு
பார்த்து கூட்டிட்டு போறேன்.தயாரா இரு!”

         மனதிலிருந்த பாரம் நொடியில் இறங்கியவராய்
பட்டென ரிசீவரை வைத்தார்,முதியவர் ராமரத்தினம்.


 நன்றி: தினமலர்-பெண்கள்மலர்

Monday, January 24, 2011

சர்வர்



      காமாட்சி,எத்தனை முறை தான் ராமுகிட்ட சொல்றது.
 நானே முதலாளி கையையும் காலையும் புடிச்சி என்க்குன்னு
போடுற சாப்பாட்ட அவன் சாப்பிட ஏற்பாடு பண்ணியிருக்கேன்
தெரியுமா?

       நெற்றிக் கோடுகள் சுருங்க கூறினார் சதாசிவம்.
  ‘ நான் என்னங்க செய்யட்டும்.கேக்க மாட்டேங்குறான்’
அலுத்துக் கொண்டாள் காமாட்சி.

    கெவுரு கூழும் நொய்க் கஞ்சியும் என் உடம்புக்கு
பழகிப் போனது.ஒட்டிப் போன இந்த உடம்புக்கு இதே
போதும்.மாடாட்டும் கூலி வேலை செய்யுறான்,பாவம்.
மூணு பதார்த்தத்தோட ஹோட்டல்ல போடுற ருசியான
சோத்த திங்க அவனுக்கு கசக்குதா? சரி, நான்
ஹோட்டலுக்கு கிளம்புறன்.அவன வந்து மரியாதையா
சாப்பிடச் சொல்லு.

       வியர்வை வழிந்தோடிய உடலை துண்டால்
ஒற்றியபடி வந்தமர்ந்தான் ராமு.

      அம்மா...சோத்தைப் போடு மணியாச்சு.
டேய் ராமு,அப்பா தான் அவ்வளவு தூரம் சொல்றாரே,
ஹோட்டல்ல வந்து சாப்புடுன்னு...

     அம்மா,பெத்த புள்ள தான் அப்பனை உக்காத்தி
வெச்சி சோறு போடணும்.ஏதோ நம்ம குடும்ப கஷ்டம்,
அப்பா சர்வர் வேலை பாக்குறாரு.அங்க அப்பா எனக்கு
சோறு போட்டு தண்ணி ஊத்தி எச்சலை எடுக்குறத
என்னால பாத்து கிரகிச்சுக்க முடியலம்மா.அவரையே
அங்க சாப்பிட்டுக்கச் சொல்லு.

      யார் பக்கம் பேசுவது?குழம்பிப் போனாள் காமாட்சி.

 நன்றி: தினமலர்-பெண்கள்மலர்

அலை பேசி அழைப்பு

  நடுநிசி இரவில் வரும்
 அலைபேசி அழைப்புகள்
 அதன்பிறகான அவரின்
 நீண்ட உரையாடல்கள்
 இரவு உணவை
 தவிர்த்த பல இரவுகள்
 சுவாசம் அறிந்த மயக்கும்
 புதிதொரு வாசனைகள்
 வகிடெடுக்கா இளம்
 பெண்ணுடன் ஜோடியாய்
 பயணித்ததை பார்த்த
 அந்த கணங்கள்
 ஜடமாய் இப்படி
 பழகத்தான் வேண்டியுள்ளது...
 கல்வி கொடுக்காமல்
 கண் மூடிய
 தந்தையை நினைத்தும்
 படிப்பில் மும்முரமாய்
 இருக்கும் என்
 பிள்ளைகளை நினைத்தும்.

இலவசம் என்றால் அலட்சியமா




       சில மாதங்களுக்கு முன் எங்கள் தெருவிற்கு
வீடு வீடாக வந்து யானைக்கால் நோய்க்கு இரத்தப்
பரிசோதனை செய்தனர்.

    “ஐந்து நிமிடம் முன்பு தான் தெரு முனையில்
பார்த்தேன்.அதற்குள்ளாகவா இத்தனை வீடுகள்
முடித்து விட்டீர்கள்” என கேட்டேன்.

      “எங்கேம்மா,யாரும் பரிசோதனைக்கு
ஒத்துழைப்பு கொடுப்பதே இல்லை” என்று வருத்தத்துடன்
சொன்னார்.

       குழந்தைகள் எல்லாம் பயப்படுகிறார்கள்.முதலில்
கிளம்புங்கள் சார் என்கின்றனர்.இவர்கள் எல்லாம்
குழந்தைகளுக்கு சரியாக தடுப்பூசி கொடுக்கிறார்களா
என தெருயவில்லையே என சந்தேகித்தார்.இத்தனைக்கும்
இப்பகுதியில் யானைக்கால் நோயின் பாதிப்புக்குள்ளானோர்
பலர் இருக்கின்றனர்.6 மாதத்திற்கொருதரம் அரசு
கொடுக்கும் தடுப்பு மருந்துகளை உட்கொண்டால் கால்
வீக்கம் அறவே வராது.ஆனால்,பலர் இதை
அலட்சியப்படுத்தி எங்கள் கண் எதிரிலேயே தெரு
காவாயில் வீசுகின்றனர்.இலவசமாய் கொடுக்கும் எதற்கும்
மக்களின் அலட்சியப் போக்கை பாருங்கள் என
வருந்தியபடியே சொன்னார்.

      அவர் சொன்னது போல்,எங்கள் தெருவில்
வசிக்கும் பலரும் இரத்தம் பரிசோதிக்க ஆர்வம்
காட்டவேயில்லை.இலவசம் என்றாலே மக்களுக்கு
அலட்சியம் தானா?

Saturday, January 22, 2011

வாழ்க்கை என்பது.....



      கருமேகங்கள் சோலைப்பட்டியை வளைத்தாற்போல்
சூழ்ந்துக் கொண்டது.  அங்கொன்றும் இங்கொன்றுமாக
வானம் தூறிக் கொண்டிருக்க, மல்லிகா வாசலுக்கும்
வீட்டிற்குமாய் அலைந்துக் கொண்டிருந்தாள்.  தூரத்தில்
தெரிந்த சின்னாவைப் பார்த்து

    “டேய் சின்னா, கவிதா அப்பாவ எங்கிட்டாச்சும்
வழியில பாத்தியாடா?”

     ‘இன்னமும் வந்து சேரலையா?  அவன் எந்த மூலையில
விழுந்து கெடக்கானோ’ ஆடிக்கொண்டே அருகில் வந்த
சின்னாவின் கண்கள் தக்காளிப் பழம் போல சிவந்திருந்தது. 
தலைமுடி தாறுமாறாய் கலைந்திருக்க அழுக்கு மூட்டையாய்
காட்சியளித்த கைத்தறி லுங்கியிலும் ஆங்காங்கே கிழிசல்கள்.

   “கவிதா குட்டி தூங்கிருச்சா?”  வீட்டினுள் எட்டிப் பார்க்க
முற்பட்டவனை

      ‘எலேய் அங்கிட்டு நவுருடா.  உன்னய பாத்தா என் புள்ள
பயப்புடும்.  போடா வுன் வூட்டுக்கு…  என்ன ஜென்மங்களோ
தினமும் இப்புடி குச்சிட்டு பொஞ்சாதி புள்ளைங்க உசுர
எடுக்கணும்னு வூட்டுக்கு வந்து சேருதுங்க.  ம்…  இந்த மனுஷன்
எங்க போய் சேந்துச்சோ, எல்லான் என் தலையெழுத்து’.

      வேகமாக கதவை மூடிக் கொண்டு கவிதாவின் பக்கத்தில்
போய் படுத்தாள்.  கடிகாரத்தில் சிறிய முள்ளும் பெரிய முள்ளும்
பத்தில் சந்தித்துக் கொண்டன.

       அந்த பெருநகரத்தின் கடைசியில் ஒட்டினாற்போல்
அமைந்திருந்தது சோலைப்பட்டி.  அகண்டு நீண்டிருந்த பட்டியின்
முதல் தெரு நெடுகிலும் எறும்புக் கூட்டம் போல ஒன்றன்பின்
ஒன்றாக லாரிகள் நிறுத்தப்பட்டிருக்கும்.  லாரி புக்கிங்
ஆபீஸ்களும் கனரக வாகன பழுது பார்க்கும் கடைகளுமாக
நீளும் மறுபுறம்.

       நகரத்தின் பெரும்பாலான லோடுகளை இங்கிருக்கும்
லாரிகளே சுமந்துக் கொண்டு திரியும்.  சோலைப்பட்டி
இளைஞர்கள் பெரும்பாலும் டிரைவர்களே.  ஒருசில விவசாயக்
குடும்பங்களும் வானம் பொய்த்து போனதால் நிலங்களை விற்று
லாரிகளை வாங்கிக் கொண்டிருந்தன.

      லாரியை விட்டு இறங்கியதும் கணக்கை காட்டிவிட்டு
பொடிநடையாய் நடந்து கங்காபாயின் சாராயக் கடைக்குள்
நுழைந்தான் சேட்டு.  மெலிந்த உடல், இரண்டு வாரமாய் சவரம்
செய்யாத முகம், வெளுத்த தேகம், கருத்த உதடு, இரண்டு
சென்டிமீட்டர் அளவிற்கு குழி விழுந்த கண்கள் என
பரிதாபமாய் இருந்தான்.

      ‘எலேய் எங்கிட்டுயா வந்தே.  உடம்பு சரியில்லாதவனுக்கு
ஊத்திக் கொடுக்குறேனுட்டு உன் பொண்டாட்டி என்னய
வந்து சண்ட பிடிக்கா’.

       ‘என்னாயக்கா நீ வேற.  அவ கிடக்கா சிருக்கி மவ’.

      சொல்லுவடா சொல்லுவ.  ரெண்டு வருஷமா அவள வுட்டு
ஓடிப் போயி போன தையில எலும்பும் தோலுமா வந்து சேந்த.
போனாப் போகுதுன்னு உன்னய சேத்துக்குனா பாரு.  அவ
சிருக்கியேதான்.  சரி, சரி, துட்ட எடு.

      வந்து….  என்னான்ட மருந்து வாங்கத்தான் துட்டு இருக்கு.
நாளைக்கு சேத்து தந்துடுறன் யக்கா’.

       ‘யோவ், உனக்கு மருந்தும் வோணும்.  மப்பும் வோணுமா?
எடுய்யா துட்ட.  நாளைக்கு நீ இருப்பியோ போய்ச் சேருவியோ’.

       பணத்தை கொடுத்து ஒரே மூச்சில் மொத்தத்தையும் உள்ளே
தள்ளினான்.

       பன்னிரெண்டு முறை அடித்து சோர்ந்தது கடிகாரம்.  வெளியே
வானம் பொளந்து கொட்டிக் கொண்டிருந்தது.  சரியான அடைமழை.
மல்லிகாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை.  இந்த மனுஷன் எங்க
போச்சோ தெரியலியே என மனம் பேயாய் அடித்துக் கொண்டது.
ரத்த வாந்தி எடுத்து நாலு நாள் குடிக்காம வந்துச்சி.  இன்னிக்கு
குடிச்சு எங்கிட்டாச்சும் விழுந்து கிடக்கா.  மழை வேற ஓயலியே.
மாரியாத்தா ஏன் என்னய பாடாப் படுத்துற.  ஆடியில உனக்கு
ஒரு குடம் கூழை ஊத்தறேன்.  அவன் குடிய நிறுத்து.

        அரம்பியபடியே தலையை அள்ளி முடிந்து பாதியாய் நைந்துப்
போன ஒத்தைப் பாயை தலைக்குக் கொடுத்து மழையில் இறங்கி
கங்காபாயின் கடையை நோக்கி ஓட்டமும் நடையுமாய்
முன்னேறினாள்.

       கூட்டு ரோடின் மூலையில் சோடியம் விளக்கு வெளிச்சத்தை
உமிழ்ந்துக் கொண்டிருந்தது.  தூரத்திலேயே தெரிந்துவிட்டது
அவளுக்கு, சேட்டுதான் மூலையில் மடங்கிக் கிடக்கிறானென்று.

       அவனை கிடத்தி நிறுத்தி வீட்டிற்கு வந்து சேர்வதற்குள்
அவளுக்கு போதும் போதும் என ஆகிவிட்டது.  ஒருவழியாக
விடிந்தது.

      லொக்…  லொக்…  லொக் தொடர்ந்து இரும்பினான் சேட்டு.

      யோவ், நீ என்னிக்குத்தான் திருந்தப் போறியோ.
மழைக்காச்சும் ஒதுங்கிக்கக் கூடாது.  எத்தன தடவ சொல்றது
இந்தா இந்த காப்பித் தண்ணியாவது குடி.  உன்னய அந்த
ஆத்தாதான் காப்பாத்தணும்.

       லொக்…  லொக்…  லொக்… இருமல் தன் உக்கிரத்தை
சேட்டுவிடம் காட்ட ரத்த ரத்தமாய் வாந்தி வெளியேறியது. 
தூக்கத்திலிருந்த கவிதாவும் சத்தத்தைக் கேட்டு எழுந்து
ஓடிவந்தாள்.

       வெட்டப்பட்ட பட்ட மரம் போல கயிற்று கட்டிலில்
சாய்ந்தவனின் கண்கள் இரண்டும் மேல்நோக்கி செருகியவாறே
சென்று கூரையின் விட்டத்தில் நிலை கொத்தி நின்றன.

      “ஐயோ, பாவி மனுஷா என்ன வுட்டுட்டு போயிட்டியா?” 
மழையின் இரைச்சலிலும் மல்லிகாவின் கதறல் நாலு வீடு தள்ளியும்
கேட்டது.  இறந்த சேட்டுக்கு ஊரே உச் கொட்டியது.  சடலத்தை
பார்த்துவிட்டு நேரே கங்காபாயின் கடைக்குச் சென்று சரக்கு ஏற்றி
வந்தார்கள் பங்காளிகள்.  பத்து வயது கவிதாதான் கொள்ளி
போட்டாள்.

        எல்லாம் முடிந்து போயிற்று.  மல்லிகாவின் மனதில் மட்டும்
அந்த கேள்வி முற்றுப் பெறாமல் சுழன்றுக் கொண்டிருந்தது.
அவ்வப்போது தொலைக்காட்சியில் வரும் விளம்பரத்தை காணும்
போதெல்லாம் சேட்டுக்கு எய்ட்ஸ் இருந்திருக்குமோ?  நல்லா
இருந்த மனுஷன் என்னய வுட்டுட்டு போனதுக்கப்புறம் கண்ட
நாதாரிங்ககிட்ட போச்சுனு தெரியும்.  குடியினாலதான் உடம்பு
கெட்டுச்சினு நினைச்சோமே.  நோயால இருக்குமா.  எனக்கும்
அவனால அந்த கர்மம் புடிச்ச நோய் இருக்குமோ?

      பள்ளிக்கு மட்டம் போட்டு விட்டு கவிதாவுடன் நகர இரத்தப்
பரிசோதனை நிலையத்திற்குப் போய் பரிசோதித்தாள்.  முடிவில்
எச்.ஐ.வி. பாஸிடிவ் உறுதிப்பட்டிருந்தது.  இதயம் துடிக்க மறுத்தது.
தலை கிறுகிறுத்தது.  கண்கள் சுழல சுவரில் சாய்ந்தாள்.  தான்
இன்னும் சில வருடங்களில் சாகப் போகிறோம் என்ற கொடுமை
அவளை குடைந்தெடுத்தது.  நல்ல வேளை கவிதாவிற்கு இல்லை.

     “போன பாவி எனக்கும் தேதி குறிச்சிட்டு போயிட்டியா”? 
ஓவென அழ வேண்டும் போல் இருந்தது அவளுக்கு.  இது
எல்லோருக்கும் தெரிந்து தன்னை ஒட்டுமொத்தமாக
ஒதுக்கிவிட்டால், எல்லாவற்றிற்கும் மேலாக கவிதா தன்னை
ஒதுக்கிவிட்டால் என்ன செய்வேன்?  அதுவும் இல்லாம என் புள்ள
அனாதையாயிடுமே… ஊருல இருக்குற புருஷன் பொண்டாட்டிங்க
சேந்தாப்புல அடுத்தடுத்த வருஷத்துல செத்தாங்களே, எல்லாம்
இந்த நோயோட புண்ணியத்துலதான் போலிருக்கு.

        மரண பயம் அவளின் ஒவ்வொரு அணுவிலும் குடிகொண்டது.
கவிதா பெரியவளாகி கல்யாணம் காட்சி பண்ணி வெக்குற
வரையாவது என் உசுர இந்த உடம்புல தக்க வை மாரியாத்தா,
கெஞ்சலுடன் வேண்டினாள்.  வேண்டுதல் வேண்டி வேண்டி அவள்
நா வறண்டதுதான் மிச்சம்.  நிம்மதியின்றி தவித்தவள் சதா
செத்தவனை திட்டித் தீர்த்தாள்.

        “அம்மா”

        ‘என்னடா செல்லம்’

      “ஏம்மா ஒரு மாதிரி இருக்கே.  எங்கூட முன்ன மாதிரி
பேசவே மாட்டேங்குற.  முட்டிக்கொண்டு வந்த அழுகைக்கு
முட்டுக்கட்டைப் போட்டு விசும்பி விசும்பி, “அது வந்து… உங்கப்பன்
செத்துப் போச்சுல்ல, அத நினைச்சி தான்’.

       போம்மா, செத்து போனதே நிம்மதி.  தினம் குடிச்சிட்டு வந்து
உங்கூட சண்டை போட்டுக்கினு வாந்தி எடுத்துக்குனு…  அது
இல்லாததே நிம்மதியா இருக்கு.  நீ அழாதம்மா…  இனிமே
சந்தோஷமா இருக்கலாம்’.  ஆறுதலாய் கண்ணீரை
துடைத்தாள் மகள்.

        மல்லிகாவின் வீடு வந்ததும் மிதிப்பதை நிறுத்தி
சைக்கிளை ஓரங்கட்டினான் செவலை.

      ‘யக்கா… யக்கா..  நம்ம மாமு தவறிடுச்சாமே’

       ரெண்டு மாசமாச்சு.  இப்ப வந்து கேக்குறியா

       ஊருலருந்து இப்பதான் வந்தேன்.  கேட்டதும் நேரா
ஓடியார்றேன்.

       ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோடா, நீயும் தெனம்
குடிச்சீன்னா அந்தாளு போனா மாதிரிதான் உனக்கும் கதி. 
திருந்திடுடா’.

      ‘நீ வேற.  அந்த கருமத்தவுட்டு மாசக் கணக்காச்சு.
ம்… அப்புறம், சேதி தெரியுமா உனக்கு.  நம்ம மிலிட்டரி
காத்தவராயன் பொண்ணு தேன்மொழிக்கும் எனக்கும்
கல்யாணம் நடக்கப் போவுது.  உனுக்குதான் தெரியுமே
ரொம்ப நாளா ரூட் வுட்டுனு இருந்தேன்.  அப்பா மனச மாத்திட்டு
தகவல் சொல்றேன்னு சொல்லிச்சு.  அவங்கெல்லாம் ஒத்துக்குனு
வர்ற ஆவணியில கல்யாணம்க்கா’.

      நீ மாறிட்டேன்னு என்னால நம்பவே முடியல. 
எப்புடியோ, நல்லா இருந்தா சரிதான்.

      சரிக்கா.  வரட்டுமா மனச தைரியமா வச்சுக்க.

      மல்லிகாவின் மனதிற்குள் பழைய குடைச்சல்.  முன்பு
ஒருதரம் சேட்டுவிடம் வாய்ச்சண்டை போடுகையில் “ஆமா…
உந்தம்பி மட்டும் என்ன ஒசத்தியா.  நாகர்கோவில்ல லோடு
இறக்குனப்ப அந்த வூட்டுக்குப் போனேன்.  உன் மச்சான் கூட
ரெண்டு நாள் முன்னாடி வந்துச்சுனு பார்ட்டி சொல்லுச்சு.
நீ என்னய கேக்க வந்துட்டியா போடீ” என உரைத்தது லேசாக
ஞாபகத்துக்குள் வந்தது.

      அப்ப அவனுக்கும் எய்ட்ஸ் இருக்குமோ?...

      டேய் செவல.  கவிதா பள்ளிக்கூடத்துக்குப் போய் இந்த
பணத்தை கட்டிட்டு வா.  அதுக்குத்தான் வரச்சொன்னேன்.

      இதுக்குத்தான் கூப்பிட்டியா.  முக்கியமான வேலையா
வெளியூர் போயினு இருக்கேன்.  ஆள வுடு.

      செத்த நில்லுடா.  கவர் மெண்ட் ஆளுங்க வீடு வீடா
வந்து மலேரியா ஜீரம் இருக்கான்னு இரத்தம் டெஸ்ட் பண்றாங்க.
வெளியூர் போறேன்னு சொல்ற.  இங்கயே பண்ணிக்க.

     உங்கூட பெரிய தொந்தரவு.  சரி எடு சாரு…  ஸ்… ஆ…
வரட்டுமா

     ‘ரொம்ப நன்றிய்யா.  நான் கூப்பிட்டேன்னு இவ்வளவு
தூரம் வந்ததுக்கு.  நானே வந்து முடிவ தெரிஞ்சிக்குறேன்.  இது
யாருக்கும் தெரிய வேணாம்.

     ‘சரிம்மா’ விடைபெற்றார் அவர்.

       எதிர் பார்த்த மாதிரியே செவலையின் உடம்பிலும்
அந்த கொடிய வைரஸ் கிருமி ஆக்கிரமித்திருந்தது.

       எங்கும் கும் இருட்டு.  தாய்வீட்டு பாதை பரபரவென
இழுத்துச் சென்றது மல்லிகாவின் கால்களை.  காதருத்தான்
வண்டுகளின் ரீங்காரம் தொடர்ந்து ஒலிக்க கதவைத் திறந்து
உள்ளே நுழைந்தாள்.  அவளை பார்த்துவிட்டு குடித்துக்
கொண்டிருந்த பாட்டிலை துண்டு போட்டு மறைத்தான்.

      ‘என்ன, இந்த அர்த்த ராத்திரியில வந்துக்குற’

      டேய், ஒரு முக்கியமான விஷயம்.  அன்னிக்கு இரத்தம்
டெஸ்ட் செஞ்சியே, அதுல உனக்கு எய்ட்ஸ் நோவு இருக்குனு
உறுதியாயிடுச்சு.

       என்னது, எய்ட்ஸா…  என்னா… கதை வுடுறியா.
ஆனால் கேட்டு ஆடித்தான் போனான்.

      எதுடா கதை.  இந்தா பார் ரிசல்ட்டை.  நீ தப்பான
பழக்கம் வெச்சிருந்தது உண்மையா இல்லையா?  எவ்வளவு
விளம்பரம் பண்ணாலும் எங்கடா போவுது புத்தி.  த பாரு, உன்
கல்யாணத்த உடனே நிறுத்து.  அந்த பொண்ணு வாழ்க்கைய
பாழாக்கிடாத.

      என்னாது, அதெல்லாம் நிறுத்த முடியாது.  இங்க பார்,
உனக்கும் எனக்கும் தவிர யாருக்கும் தெரியாதுல்ல.  நீ உன்
வாய பொத்திக்கினு இரு போதும்.

      டேய், ஒரு உசுறு உனக்கு சாதாரணமாய் போச்சா. 
வேணாம்பா.  உன் மாமனால எனக்கு வந்ததே போதும்.  கண்
முன்னாடியே நல்ல பொண்ணுக்கு கொடுமை நடக்கறத
பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன்.  அந்த பொண்ணு வீட்டுல
போய் சொல்லத்தான் போறேன்.  வேணாம்னா நீயே ஒதுங்கிடு.
உண்மையிலேயே அவளை நீ காதலிச்சியிருந்தீன்னா
அவள விட்டுடு.

      ‘காதலாவது கத்திரிக்காயாவது.  நான் அவ சொத்துக்கு
குறி வெச்சுத்தான் அவ பின்னாடி சுத்தினேன்.  மாட்டிக்கிட்டா.
இனி நான் எதையும் இழக்க மாட்டேன்.  ஆமா… உனக்கு
எய்ட்ஸ் இருக்கா?  நீ யாருகிட்டயோ போய்த் தொத்தினு
வந்துட்டு என் மாமன் மேல பழி போடுறியா?’

       ‘ஏ நாயே, என்னடா சொன்னே சட்டையை பிடித்து இழுத்தாள்’.

         ஏய், சொந்த அக்கான்னு கூட பாக்கமாட்டேன்.  என்னய
பத்தி உனக்கு நல்லாவே தெரியும்.  போ …டீ சனியனே’ கழுத்தை
பிடித்து தள்ளினான்.

        கீழே விழுந்தவள் ஆக்ரோஷ மாய் எழுந்தாள்.  கூரையில்
சொருகியிருந்த வெட்டரிவாளை எடுத்து ‘நாயே, இந்தா வாங்கிக்க’
தடுக்க முற்பட்டு திசைமாறி விழுந்தவனை தறிகெட்டு வெட்டி
சாய்த்தாள்.

       கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டாள் மல்லிகா. வாதம் நடந்தது
‘உன் தம்பி செவலைய கொன்னேன்னு ஒத்துக்கிறியாம்மா’  - நீதிபதி.

       சின்ன விசும்பலுடன் ஆரம்பித்தாள்.

      ‘நீதிபதி ஐயா, என் தம்பிய நான்தான் கொன்னேன். 
அவனுக்கு எய்ட்ஸ் நோவு இருந்துச்சி.  வர்ற மாசம் அவனுக்கு
கல்யாணம்.  வேணாம்னு தடுத்தேன்.  கேட்கல.  தெரிஞ்சே ஒரு
பொண்ணு வாழ்க்கைய வீணடிக்க நான் விரும்பல.  நானும் ஒரு
எய்ட்ஸ் நோயாளிதான்.  என் புருஷனாலதான் எனக்கிந்த கதி.
எனக்குத் தெரிஞ்சு எங்க ஊருல பாதி பேர் இப்படி தறிகெட்டு
அலைஞ்சவங்கதான்.

      ஐயா… கல்வியறிவில்லாத எங்க ஊரு ஜனங்களுக்கு இது
ஒரு பாடமா இருக்கட்டும்னு உணர்ச்சிவசப்பட்டுட்டேன். 
பொடிசுங்க கூட தட்டிக் கேட்க ஆளில்லாம அந்த மாதிரி
வீடுகளுக்குபோவுதுங்க.  இப்படியே போனா எங்க ஊரே
குட்டி சுவராயிடும். கல்யாணத்துக்கு ஜாதகத்தை பார்க்கிற
வங்க மாப்பிள்ளையோட இரத்தத்தையும் சோதனை
செஞ்சு பார்த்துதான் சம்மதிக்கணும்.  அப்பதான் என்னய
மாதிரி அப்பாவிங்க பலியாகாம இருக்க முடியும்.
ஐயா… கடைசியா ஒன்ணு.  என்னய தூக்குல வேணாலும்
போடுங்க.ஐஞ்சாங் கிளாஸ் படிக்குற எம் பொண்ணு
கவிதாவோட படிப்புக்கும் அவ தங்குறதுக்கும் ஒரு நல்ல
முடிவை நீங்களே சொல்லிடுங்கய்யா என கைகூப்பி
அழத் தொடங்கினாள்.

தீர்ப்பு எழுதப்பட்டது.

    அறை முழுவதும் நிசப்தம்.  மல்லிகாவின் உடல் சிறு
நடுக்கத்திற்கு உள்ளாகியது.  “மல்லிகா என்ற இந்தப் பெண்
செவலையின் திருமணத்தை பெண் வீட்டாரிடம் சொல்லி
 நிறுத்தியிருக்கலாம்.  அதை விடுத்து வெட்டிச் சாய்த்ததால்
 தண்டனைக்குள்ளாகிறாள்.  இவள் ஒரு எய்ட்ஸ் நோயாளி
என்ற காரணத்தினாலும் ஒரு பெண்ணின் வாழ்க்கை வீணாகி
விடக் கூடாது என்ற நல்லெண்ணத்தின் பேரிலும் தண்டனைக்
காலத்தை குறைத்து இரண்டு ஆண்டு கால கடுங்காவல்
தண்டனை விதிக்கிறேன்.  மேலும் அவர்தம் மகளின் படிப்பிற்கும்
 உறைவிடத்திற்கும் ஆதரவற்றோர் பள்ளியில் சேர்க்க அரசாங்கம்
பொறுப்பேற்றுக் கொள்ள உத்தரவிடுகிறேன்.

      மேலும், சோலைப்பட்டியின் நிலை குறித்து எய்ட்ஸ்
கட்டுப்பாட்டு வாரியம் தீவிர பாதுகாப்பு நடவடிக்கையில் இறங்க
வேண்டும்.  ஏற்கனவே தமிழகத்தில் இந்த மாவட்டத்தில்தான்
எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம் என புள்ளி விவரம் கூறுகிறது. 
அதன்படி கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து எய்ட்ஸ்
நோயாளிகளுக்கான உணவுமுறை, வரும்முன் காத்தல், ஒழுக்க
நெறிகள் என விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் துரிதப்படுத்த
அரசாங்கம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துகிறேன்.

      அந்தப் பெண் மல்லிகா கூறியது போல் எய்ட்ஸை ஒழிக்க
திருமணத்திற்கு கட்டாயம் ஆண் மற்றும் பெண்ணின் இரத்தப்
பரி சோதனை அறிக்கை நகலை சமர்ப்பிக்க வேண்டும் என்ற
யோசனையை நான் வரவேற்கிறேன்.  இதை சட்டமாக்க
அரசுக்கு பரிந்துரை செய்கிறேன்.



-   
      
     

   

Thursday, January 6, 2011

பிள்ளைகள் உணர்வை மதியுங்கள்




      எனக்கு தெரிந்தவர் மகனுக்கு பெற்றோர்
பார்த்து பேசி பெண் கிடைக்கப் பெற்றது.நிச்சய
தாம்பூலமும் நன் முறையில் முடிந்தது.அது
முதல் பெண்ணும் மாப்பிள்ளையும் நித்தம்
அலை பேசியில் பேசிக் கொண்டனர்.பேசிக்
கொண்ட தோடு மட்டு மின்றி ஓட்டல்,சினிமா
என்றும் சென்றுள்ளனர்.

     திடீர் நிகழ்வாக பெண்ணின் பெற்றோருக்கு
மாப்பிள்ளை வீட்டாரை பிடிக்காமல் போக
திருமணத்தை வேண்டாமென்று தட்டிக்கழித்தனர்.
மாப்பிள்ளை வீட்டார் எவ்வளவோ எடுத்துச்
சொல்லியும் இறங்கி வந்தும் பயனில்லை.
திருமணம் நிச்சயத்தோடே நின்று போனது.
ஆனால்,தினம் அலை பேசியில் பேசிக் கொண்ட
இளசுகள் ஸ்தம்பித்து போயினர்.பெற்றோரின்
வார்த்தைக்கு இணங்குவதா உணர்வுக்கு மதிப்பு
கொடுப்பதா என விழி பிதுங்கினர்.

     பெற்றோர்கள் ‘திருமணத்திற்கு முன்  பேசிக்
கொள்ளட்டும்,இந்த காலத்தில் சகஜம் தானே’
என முதலில் சொல்லி விட்டு தங்கள் ஈகோ
பிரச்சனையால் வெட்டி விடுவது நன்றாகவா
இருக்கிறது?

    திருமணத்துக்கு முன் அனைத்தையும் அளவோடு
வைத்துக் கொள்வது இளசுகளுக்கும் தகும்.வீணான
சங்கடத்தை நாமே ஏன் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.?