Banner

என் அன்பான கணவருடன்
'பிடிக்குள் அடங்கா மெளனம்' புத்தக வெளியீட்டில் VIT வேந்தர்
சிறந்த நூலாசிரியருக்கான தமிழக அரசின் விருது
சாதனை பெண்கள் விருது 2020
VIT வேந்தரிடம் பெற்ற தமிழன்னை விருது
Guest motivational speech in Bharathi college

Tuesday, December 1, 2015

பலத்த...மிக பலத்த...


மழைப்பெண்ணே...
உமக்கும் எமக்கும்
பிறந்தவீடு புகுந்தவீடென்று
இரு வீடுகள் உண்டு

நிலமகள் தாலாட்ட
ஆறு குளம் ஏரி கடலென
பிறந்த வீட்டு பெருமைகள்
 உனக்குண்டு ஏராளம்

திருமணம் புரிந்து
எங்களை பிரிந்துச் சென்றாய்
வானமண்டலம் நோக்கி

புக்ககத்தில் நீ எதிர்கொள்ளும் சண்டைகள்
இடியும் மின்னலுமாய் வெளிப்பட
பிறந்தகம் தேடி வந்து
அவ்வப்போது குளிர்வித்துச் சென்றாய்

யார் கண்பட்டதோ!
தாய்வீட்டுடனான உன் பிணக்கில்
பஞ்சத்தில் பரிதவித்தோம் நாங்கள்
ஏன் இந்த பாராமுகம் என
பெரும் வேள்வி கொளுத்தினோம்
அமிர்தவர்ஷினியை அடாது பாடினோம்

நல்லிணக்க ஒப்பந்தமாய்
நளினமாய் தான் வந்திறங்கினாய்
ஒரு நவம்பர் திருநாளில்

அடைமழையாய் ஆரம்பித்து
அடங்காத மழையாகினாய்
அதிரசமாய் இனித்த நீ
அர்த்தமற்றதாய் மாறிப் போனாய்
பயிர்களை சீர்குலைத்து போட்ட
ருத்ரதாண்டவ ஆட்டம் அது

முதன்மைசாலைகலும் முட்டுச்சந்துகளும்
நச்சுப்படலம் பூசிக் கொண்டது
பலத்த...மிக பலத்த...என
உன் பராக்கிரமங்கள் கூடக்கூட
நனைந்தோம்!  நீந்தினோம்!
மிதந்தோம்!  மூழ்கினோம்!
அச்சம் அதிர்ச்சி ஆற்றாமை
என வடதமிழகம் வாய்பிளந்தது

மழைப்பெண்ணே...
பிறந்த வீடென்பது அவ்வப்போது
வந்துவிட்டுச் செல்லத்தான்
 நிரந்தரமாக தங்கிவிட அல்ல

உன் அழிச்சாட்டியத்தை
கணவன் வீட்டாரிடமே வைத்துக்கொள்
தமிழகம்  பிழைத்துப் போகட்டும்!!!

      

Saturday, November 7, 2015

கலைஞர் டிவியில் நான்

வணக்கம்.வரும் தீபாவளி  செவ்வாய் (10.11.2015) அன்று  காலை 9.00 மணிக்கு கலைஞர் டிவியில் லியோனி பட்டி மன்றத்தில் அறுவரில் ஒருவராக பங்கேற்கிறேன்.

Friday, October 16, 2015

கலைஞர் டி வி யில் நான்

11.10.2015 அன்று கலைஞர் டி வி யில் நெஞ்சு பொறுக்குதில்லையே நிகழ்சிசியில் மனிதநேயம் குறித்து நான் பேசியது


https://www.youtube.com/watch?v=zJTLHFlNMR8




Saturday, September 19, 2015

தின மலர்-பெண்கள் மலர் 19.09.2015 இதழில் வெளிவந்த கவிதை

     பல்லாங்குழி X கல்லாங்கா

அடர்ந்த மழை நாள் ஒன்றில்
பல்லாங்குழிக்கும் கல்லாங்காவுக்கும்
பெருத்த சண்டை

நானே கவனிப்பு திறனை அதிகரிக்கிறேன்
என்றது பல்லாங்குழி 
சிணுங்கல் அசங்கல் என் மூலம் தான்
என்றது கல்லாங்கா

சரிகுழி பாண்டியன் என்னுள் அடக்கம்
என்றது பல்லாங்குழி
உட்டைக் கல் ஆட்டம் எனக்குச் சொந்தம்
கர்ஜித்தது கல்லாங்கா

மூளைக்கு வேலை
அடித்துச் சொன்னது பல்லாங்குழி
கைவிரல்களின் குவிப்பை
விளக்கிச் சொன்னது கல்லாங்கா

அக்குபஞ்சர் புள்ளியை
பீற்றிக் கொண்டது பல்லாங்குழி
வழித்தல் கணக்கை
ஏற்றிச் சொன்னது கல்லாங்கா

பல்லாங்குழிக்கும் கல்லாங்காவுக்கும்
கூட்டாய் குழி வெட்டி
வெற்றி கண்டது இணையம்.
 

மங்கையர் மலர் இதழில்...

    செப்டெம்பர் 16-30 இதழில் ஜெயஸ்ரீராஜ் நினைவுச்சிறுகதை போட்டி-2015 ல் இரண்டாம் பரிசு பெற்ற எனது சிறுகதை வெளிவந்துள்ளது

Thursday, August 13, 2015

8.8.2015 பெண்கள் மலரில் வெளியான அப்துல் கலாமின் நினைவலை

கலாம்


பேசிய
இறுதி வாக்கியத்தைக் கூட
முற்றோடு முடித்திருக்கிறாய்
எதிலும்
முழுமை பெற்றிருக்கிறாய்
தலைவனே!


ஏதேதோ
கண்டுபிடித்து
சாதனை புரிந்தாய்
உன்னைப் போல்
மாற்றுறு செய்ய
ஏன் மறந்தாய்?


சாமான்யனாய் இருந்து
சாதனையாளனாய் மாறிய
சகாப்தம் நீ


தாம் விண்ணில் செலுத்திய
ஏவுகணையை
ஆராய சென்றிருப்பாரோ
நம் அக்னிப் பறவை!
இருக்கலாம் இருக்கலாம் என
நாம் தேற்றிக் கொள்ளலாம்


இந்த பூமிக்குத்தான்
எத்தனை அவசரம்
அவரை தனதாக்கிக் கொள்ள



யார் சொன்னது
பூமிமாதா பொறுமைசாலி என்று?
காலனை அனுப்பி
கலாமை அரவணைத்த
அவளது அவசர செயல்
நிச்சயம்
ஏற்புடையதாய் இல்லை


அள்ள அள்ள குறையாத
நம்பிக்கை பாத்திரம் நீ!
நினைக்க நினைக்க
துக்கம் குறைந்தபாடில்லை
உன்னை எண்ணி...



Tuesday, July 14, 2015

எழுத்தாளர் இராஜம் கிருஷ்ணன் விருது

கோவை கதைத்தமிழ் அனைத்துலக 13 ஆவது ஆய்வு மாநாட்டில்
எழுத்தாளர் இராஜம் கிருஷ்ணன் விருது வழங்கினர்






Tuesday, May 5, 2015

கவிஞாயிறு விருது வழங்கும் விழா

ஆரணியில் நடைபெற்ற கவியரங்கில் ' காந்தியக்கவி நிலா ' க.பரமசிவம், தொழிலதிபர் ஆர்.என்.சாமி, திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், 'அமுதகவி ' பொன்.தங்கவேலன் இவர்களுடன் நான்.

Sunday, January 11, 2015

பெண்கள் மலர் - பொங்கல் விழா

வேலூர் ’’அன்பு  இல்லத்தில்’’ வாசகியர் கலந்து கொண்ட விழா,
விரைவில்......