Banner

என் அன்பான கணவருடன்
'பிடிக்குள் அடங்கா மெளனம்' புத்தக வெளியீட்டில் VIT வேந்தர்
சிறந்த நூலாசிரியருக்கான தமிழக அரசின் விருது
சாதனை பெண்கள் விருது 2020
VIT வேந்தரிடம் பெற்ற தமிழன்னை விருது
Guest motivational speech in Bharathi college

Friday, February 25, 2011

நினைவலைகள்





காலை ஏழு மணி. குளிர் நியூஜெர்சியில் வாட்டிக்
கொண்டிருந்தது. ஜெர்கின் அணிந்த வெள்ளை மனிதர்கள்
கண்ணுக்கு தென்பட்டார்கள். கண்ணாடி ஜன்னல் வழி வெளியே
பார்த்துக் கொண்டிருந்தாலும் கைகள் பரபரவென சமையலை
கவனித்துக் கொண்டிருந்தது சாரதாவிற்கு. நம்மூர் மார்கழி
மாதமே தேவலாம் போலும், மனதில் அசைபோட்டபடியே
வேலையை தொடர்ந்தாள்.

நியூயார்க் உலக வர்த்தக மைய கட்டிடத்தை நீலநிற
லேசர் ஒளி பாய்ச்சி மாய கட்டிடம் உருவாக்கியதைப் பற்றி
ப்ரியாவும் கௌசிக்கும் பேசிக்கொண்டிருந்தது கிச்சனினுள்
அப்பட்டமாய் கேட்டது.

இடையில் குழந்தை அழும் சத்தம் கேட்கவே அவளின்
உடல் இன்னும் பரபரப்பானது. குழந்தையை பார்க்க வேண்டி
அடுப்பை குறைக்க நினைக்கையில் திடீரென ஒரு தோன்றல்.
’ம்… ப்ரியா அங்கேதானே இருக்கிறாள். தூக்கட்டுமே.
பெற்றவள் அவள்தானே’ என்று.

மழை அடர்வது போல் குழந்தையின் அழுகை ஓசையும்
வலுத்தது. மனம் தாளாமல் குழந்தையிடம் விரைந்தாள் சாரதா.

அங்கே ப்ரியா குழந்தையை தூக்காமல் வாயாலேயே
சால்ஜாப்பு காட்டிக் கொண்டிருந்தாள்.

கோபம் பொத்துக் கொண்டு வந்தது சாரதாவிற்கு.

‘ஏன்டீ, எவ்வளவு நேரம் குழந்தை அழறது. நீ பாட்டுக்கு
உன் வேலைய பாத்துட்டிருக்க. கொஞ்ச நேரம் தூக்கக் கூடாதா?’

மா, எனக்கே டைம் ஆயிடுச்சி. பசிக்குதான் வினோ
அழுவுறான். கஞ்சி கலக்கி குடுத்துடு.

மாப்பிள்ளை சோபாவில் அமர்ந்தபடி லேப்டாப்பில்
தலையை கொடுத்து விட்டிருந்ததால் அதற்குமேல் ப்ரியாவை
திட்ட இயலாமல் வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு
குழந்தையை தூக்கியபடி கிச்சனுக்கே வந்துவிட்டாள் சாரதா.

என்ன பெண் இவள். பெற்ற குழந்தை கதறி அழுகையிலும்
கல்மனம் படைத்தவள் போல் அவள் வேலையிலேயே குறியாக
இருக்கிறாளே. இவளை எப்படி என் வயிற்றில் சுமந்தேன்.
என்னதான் அமெரிக்கா வந்தாலும் தாய்ப்பாசம் வற்றிவிடுமா.
மாறாக இங்குள்ள பெண்கள் வேலைக்குச் சென்றாலும் என்ன
லாவகமாக குழந்தைகளையும் வீட்டையும் பார்த்துக்
கொள்கிறார்கள். ப்ரியா சோம்பேறிதான். ஆனாலும்
இந்தளவிற்கா. சே..

மடமடவென சத்துக் கஞ்சி காசி வினோவுக்கு மடியில்
போட்டபடி பருக கொடுத்தாள். பசியாறிய குழந்தை
பொக்கைவாய் காட்டி சிரித்தது சாரதாவை பார்த்து.
காலையிலிருந்து உழைத்த களைப்பெல்லாம் களைவது
போல் இருந்தது அந்தச் சிரிப்பு. சமயத்தில் குழந்தையை
முழுதாக கொஞ்சக்கூட முடியாதபடி வேலைகள்
நாலாபக்கமும் பிடித்து இழுக்கும்.

வயது 65 ஆகிவிட்டபடியால் முன்போல் ஓடியாடி வேலை
செய்ய முடியாத நிலைமை. பிள்ளையை பார்த்துக் கொள்ள
இயலவில்லை என்ற மகளின் நச்சரிப்பால் பிளைட் ஏறியவள்தான்.
தற்போது ஒரு வருடம் உருண்டோடியும் இவளை அனுப்புவதாய்
இல்லை. சாரதாவின் விசாவை கால நீட்டிப்பு செய்ய அவர்கள்
பேசிக்கொள்ளும் போதெல்லாம் இவளுக்கு வயிற்றில் புளியை
கரைக்கும்.

ப்ரியாவும் மாப்பிள்ளையும் வேலைக்கு போய்விட
துறுதுறுவென பறக்கும் வினோத்தை துரத்த இறக்கை
தேவைப்பட்டது சாரதாவிற்கு. அவ்வப்போது வந்து
பாடாய்படுத்தும் மூட்டு வலியினால் வினோத்தை பார்த்துக்
கொள்வது பெரும் கஷ்டம். இடையில் சமையல், துணியை
மெஷினில் போடுவது எடுப்பது, வீட்டை பராமரிப்பது என
அத்தனையும் சாரதாவின் தலையில்தான். தன் பெண்ணே
ஆனாலும் ப்ரியாவை எப்பொழுதேனும் வார்த்தைகளால்
லேசாக கடிந்தாலும் சுருக்கென்று கோபம் பொத்துக்கொண்டு
வந்துவிடும் மாப்பிள்ளைக்கு. அவருக்கு பயந்தே
பேசுவதைக்கூட குறைத்துக் கொண்டாள்.

மாப்பிள்ளைக்கோ சாப்பாட்டில் இந்தியாவை போல
அஞ்சு மூணும் அடுக்காக வேண்டும். மாப்பிள்ளை வீட்டில்
இருப்பது அகதி வாழ்க்கை வாழ்வது போல் இருந்தது.
ஊரிலிருந்தாலாவது மருமகள் பாதி வேலைகளை பகிர்ந்துக்
கொள்வாள். அக்கம் பக்கம் ஒரு பேச்சில்லை. எல்லாம்
ஆங்கில யுவதிகள். அவர்களிடம் என்னத்தை பேச. இதே
வேலூரெனில் தெருத் திண்ணையில் அமர்ந்தபடி பக்கத்து
வீட்டு மாமியிடமும் எதிர்வீட்டு பானுவிடமும் ஊர் நடப்பும்
விவாதமும் எப்படி தூள் பறக்கும். மார்கழியில் போட்ட
கோலத்தின் அழகு, தீபாவளிக்கு எடுக்கும் கெளரி நோன்பு,
உறவு வீட்டின் திருமணங்கள், காது குத்து களேபர வெட்டு
குத்துக்கள், சதுர்த்திக்கு வாங்கும் களிமண் பிள்ளையார்,
துவர மலர் கொண்டு எரியூட்டப்பட்ட பொங்கல்… இப்படி
இழந்தது எத்தனை எத்தனை.

இதெல்லாம் கூட பரவாயில்லை. ஆனால் இந்த
முதுமையில் கணவர் அருகாமையில் வாழ்க்கை நடத்த
இயலவில்லையே என்ற ஆதங்கம்தான் அவளை அசூயை
அடையச் செய்தது.

எண்ண அலைகள் அவள் காலை தழுவ தழுவ நினைவுகள்
மணலாய் அரித்து அவளை தன்னுள் உள்வாங்கிக் கொண்டது.
மனம் ஒன்றிப்போய் அசைபோட்டது.

திருமணமாகி இருபது வருடங்கள் வரை மூத்தார் ஓரப்படி
என கூட்டுக்குடும்ப வாழ்க்கைதான். பெரும்பாலான வருடங்கள்
இவர்களின் வாழ்க்கையை கத்திரி போட்டு வெட்டி வைத்தது
பணி நிமித்தமான டிரான்ஸ்பர்கள். கணவருடன் தனியாக
பேசிக்கொள்ள நேரமெல்லாம் பெரிதாக இருந்ததில்லை.
ஆனால், அந்த பாச உணர்வை எப்படிச் சொல்ல… தனக்காக
சில கறித்துண்டுகளை இலையிலேயே விட்டுவைத்து
வருவதிலாகட்டும் கடும் வெக்கையில் ஜில்லென்று
பன்னீர்சோடா வாங்கி வருவதிலாகட்டும் இடுப்பொடிய
தீபாவளி பலகாரம் செய்த நாட்களில் இலகுவாக கால்
அழுத்தி தைலம் தடவி விடுவதிலாகட்டும் அவரின்
ஒவ்வொரு செய்கையிலும் அன்பு இழைந்தோடும்.

இதோ இந்த வயதான காலத்தில் தான் பெண் வீட்டிலும்
அவர் பிள்ளை வீட்டிலும் உழல வேண்டிய கதி. ஒற்றை
ஆண்பிள்ளை, மருமகளுக்கு முன் வாய்செத்த பிள்ளையாக
மாறிப் போனதில் அவரைவிட எனக்குத்தான் வருத்தம் தெறிக்கும்.
ரிட்டயர் ஆகி வீட்டில் இருப்பதனால், ‘மாமா பால் வாங்கி வந்து
விடுங்கள், மாடியில் உலரும் துணிகளை எடுத்து வாருங்கள் என
வாழைப்பழத்தில் ஊசி சொருகுவது போல் வேலைகளை அவர்
தலையில் கட்டிவிட்டு போய்விடுவாள். அவர் அங்கு என்ன
அவதிக்கு உள்ளாகி இருக்கிறாரோ தெரியவில்லை.

அவருக்கும் என்னை பிரிய மனமில்லை. பெண்ணுக்கு
வேண்டி இங்கு அனுப்பி வைத்துள்ளார். இரண்டு
வாரத்திற்கொருதரம் போன் பேச்சு உண்டுதான். பேசுவதெல்லாம்
அவர்கள் பேசிவிட்டு கடைசியில் என்முறை வரும் பொருட்டு
சீக்கிரம் சீக்கிரம் என்பதாய் ஜாடை காட்டும் பெண்ணை
சமயத்தில் கெட்ட வார்த்தை சொல்லி வையலாம் போல் தோணும்.

சரி, நாமே போன் போடலாம் என்றாலோ அதெல்லாம்
கைவராமல் அவர்களையே நம்பி இருக்க வேண்டிய கட்டாயம்.
கம்ப்யூட்டர் ஸ்பீக்கரில் அப்படியே பேசலாம் என்கிறார்கள்.
ஆனால், மகன் அங்கே கம்ப்யூட்டர் வாங்கினால் தானே…
மளிகை வியாபாரம் பார்க்கும் எனக்கு கம்ப்யூட்டர் எதற்கு
என்பதாய் உள்ளது அவன் கணக்கு.

அவரவர் கணக்கை கூட்டி லாபக் கணக்காக்கிக் கொள்ளவே
முயல்கின்றனர். தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும்
வேறு வேறு என்று தானே சொல்லிவிட்டு போனார்கள்.

அவரவர் சுமையை அவரவர்தானே சுமக்கணும். உதவிக்கு
வரலாம் தப்பில்லை. ஆனால், மொத்தத்தையும் நானே சுமக்க
வேண்டும் என்ற மகளின் எண்ணம் எரிச்சலாய் உள்ளது. பாரம்
ஏற்றி ஏற்றி முதுகு அழுத்துவது மட்டுமில்லை, அக்கடாவென்று
மனம் இருக்க துடிக்கும் சமயத்தில் சுதந்திர மூச்சு விடக்கூட
திராணியில்லாமல் போவதை என்னவென்று சொல்வது.
சமயத்தில் தான் ஒரு பணிப்பெண்ணாய் பாவிக்கப்படுகிறோமோ
என்ற எண்ணம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

சென்ற முறை போன் பேசுகையில் நொடிக்கொருதரம்
அவரிடமிருந்து வெளிப்பட்ட இருமல் ஓசைதான் கனவிலும்
நினைவிலும் ஓயாமல் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
உடம்பிற்கு என்ன என்றாலும் ஒன்றுமில்லை என்ற அதே ஒற்றை
பதில்தான் ஆதிகாலம் தொட்டு. இதோ அடுத்த அழைப்பு எப்போது
வரும் என ஏங்கி தவிப்பது வீட்டு காலண்டருக்கும் எனக்கும்
மட்டுமே தெரிந்த ரகசியம்.

தூங்கிக் கொண்டிருந்த வினோத் எழுந்து அழும் அழுகைதான்
நித்தமும் நினைவலைகளிலிருந்து மீட்டுக் கொண்டு வரும் துடுப்பு.
சற்று இளைப்பாறலுக்கு பின்னான தொடர் வேலைகள்.

எதிர்பார்க்கப்பட்டது போலவே சென்னையிலிருந்து தான்
அழைப்பு. மாப்பிள்ளைதான் முதலில் பேசிக் கொண்டிருந்தார்.
அடுத்து ப்ரியாவிடம் கைமாறியதும் அவளின் முகம் இருகத்
தொடங்கியிருந்தது. வினோத்தை இறக்கி விட்டு வந்து
வாங்குவதற்குள் அணைத்து விட்டிருந்தாள். ஏமாற்றத்தை
ஜீரணித்துக் கொண்டு வினவியதற்கு அவளின் குரல் தடுமாற்றம்
என்னுள் தவிப்பை பன்மடங்கு கூட்டிவிட்டது.

ஒன்றுமில்லையாம். அப்பாவுக்கு திடீரென லோ பி.பி.யாகிவிட
மயக்கம் வந்து மருத்துவமனையில் அண்ணா அட்மிட்
செய்துள்ளார்கள் என்றாள்.

ஐயையோ, இது என்ன விபரீதம். இதுவா ஒன்றுமில்லாத
விஷயம். அவரை அங்கே யார் பக்கத்திலிருந்து ஆதரவாக கவனித்துக்
கொள்வார்கள். பதைபதைப்பு தொற்றிக் கொண்டது.

நான் சதா புலம்பித் தீர்ப்பதை பார்த்து மாப்பிள்ளை
வினோவிடம் பொரிந்துக் கொண்டிருந்தார். மனதிற்குள்ளேயே
மருகுவதைத் தவிர வேறு வழியில்லை. துணிந்தே
சொல்லிவிட்டாயிற்று. என்னை இந்தியாவிற்கு அனுப்பிவிடுங்கள்.
நீங்கள் வரவில்லையென்றாலும் பரவாயில்லை. நானே
தட்டுத்தடுமாறி சென்றுவிடுகிறேன் என்று. ஆனால்,
அவளிடம்தான் பதிலில்லை.

‘கௌசிக், அப்பாக்கு ஹார்ட் அட்டாக்ங்குறத அம்மாகிட்ட
மறைச்சுட்டோம். ஆனா எத்தன நாளைக்கு. அப்பாக்கு ஏதாவது
ஆயிடுமோன்னு பயமா இருக்கு. அம்மா வேற போறேன்
போறேன்னு நச்சரிக்க ஆரம்பிச்சுட்டாங்க’.

ப்ரியா… இது பஸ்ட் அட்டாக்தான். ஒன்னும் ப்ராபளம் இல்லை.
மூணு அட்டாக் மேலயும் உயிரோட இருக்குற எத்தன பேர நான்
பாத்திருக்கேன் தெரியுமா. அடுத்த வாரம் நீயும் நானும் டூர்
போறோம். அதுவரை வினோவ யார் பாத்துப்பா. அதுவரைக்கும்
உங்கம்மாஇங்க இருந்துதானே ஆகணும்.

வெறும் மயக்கம்ணு சொன்னதுக்கே அம்மா
வெலவெலத்துட்டாங்க.அட்டாக்னு சொன்னா
அவ்வளவுதான். வேணா, டூர் கேன்சல் பண்ணிடலாமே.

கூல் பேபி, நான்தான் ஒண்ணும் ஆகாதுன்னு சொல்றேன்ல.

மாப்பிள்ளையும் ப்ரியாவும் அவ்வப்போது குசுகுசுவென
பேசிக் கொள்வது தெரிகிறது. அவர்கள் என்ன பேசுகிறார்கள்
என்பதுதான் புரியவில்லை.

இதோ டூர் முடிந்து இருவரும் வந்தாயிற்று. இந்தியா
செல்வதற்கான விமான டிக்கெட்டுகளும் புக் செய்தாயிற்று என்றார்கள்.
மாப்பிள்ளையின் கலிபோர்னியா நண்பரும் இந்தியா வர இணைந்துக்
கொண்டார். நெடுநாட்களுக்குப் பின் சொந்த வீட்டையும் கணவரையும்
காணப் போகும் உற்சாகம். இனி மற்றொரு முறை இங்கே வரவேண்டிய
சூழலை ஏற்படுத்தி தரவேண்டாம் என அருணாச்சலேஸ்வரரை
பிரார்த்தனை செய்தபின் வீடு பூட்டப்பட்டது.

விமான நிலையம் வந்து சேர்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்
வந்த அழைப்பு ப்ரியாவை குற்ற உணர்ச்சிக்கு தள்ளி விட்டிருந்தது.
அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்காம் என்றபடி மென்று முழுங்கினாள்.
ஆனால் சுந்தரத்திற்கு எல்லாம் முடிந்து விட்டதாகதான் தகவல் வந்தது.
தன்னைப் பார்க்க ப்ரியா தவிக்கும் தருணத்தை வைத்தே சாரதாவால்
அனுமானமாக யூகிக்க முடிந்தது, அங்கே ஏதோ அசம்பாவிதம் என்று.


ஜன்னலை மூட வேண்டாம் இப்போது என ஆங்கிலத்தில்
பைலட் கூறிக்கொண்டிருந்தது மிக மெல்லிதாகத்தான் கேட்டது
சாரதாவிற்கு. மாப்பிள்ளை அவ்வப்போது இருக்கைக்கு மேலிருந்த
பட்டனை அழுத்தி விமான பணிப்பெண்களை வரவழைத்தபடி
இருந்தார். சாரதா நெஞ்சில் நிரம்பியிருந்த உணர்வு குவியலுடன்
மெல்ல கண்மூடி சாய்ந்துக் கொண்டாள். கைகளில் அள்ளிய
நீர் சன்னமாக ஒழுகி தீர்ந்தது போல் அவளிடமிருந்த
நினைவலைகள்மெல்ல நழுவிக் கொண்டிருந்தது.

சென்னை வந்தவுடன், ப்ரியா தூங்கிக் கொண்டிருந்த
தாயின்தோளை தொட்டு உலுக்க சாரதா அப்படியே
இருக்கையின் பக்கவாட்டில் சாய்ந்தாள். பின் எப்போதும்
நினைவலைகள் சாரதாவை தொந்தரவு செய்யவில்லை.



நன்றி : கல்கி

Wednesday, February 16, 2011

பயணத்தின் போது...........





பேருந்து நிலையத்தில் நின்றிருந்தேன்.என்னைப்போல்
ஒரு தம்பதியும் பேருந்திற்காகக் காத்திருந்தனர்.
அவர்கள் ஏற வேண்டிய பேருந்து வரவும் இருவரும்
ஆளுக்கொருபுறமாய் முண்டியடித்துக் கொண்டு ஏறினர் .
பேருந்திலோ பயங்கர கூட்டம். இந்த கூட்டத்தை சமாளிக்க
முடியாது, உட்காரவும் இடமில்லை என அந்த பெண்
இறங்கிவிட்டார் கணவரும் இறங்கிவிட்டிருப்பார் என்பது
அவர் யூகம்.

ஆனால் அவரோ பேருந்தினுள்ளேயே மாட்டிக்கொண்டு
வெளியே வர இயலாமல் போனது.வண்டியும் புறப்பட்டு
விட்டது. கணவர் தனது செல் போன் மூலம் மனைவியின்
செல் போனைத் தொடர்பு கொண்டு அடுத்த பேருந்தில்
கிளம்பி வரும்படி சொல்லிவிட்டார்.அந்தப் பெண்,கையில்
பணம் எதுவும் எடுத்து வரவில்லையே என்று புலம்ப
ஆரம்பித்தார்.அவர் சூழ்நிலையை உணர்ந்து அவருக்கு
பயணச்செலவுக்கான பணத்தை கொடுத்தேன். நெகிழ்ந்து
நன்றி கூறினார்.

ஆண்களோடு வீட்டை விட்டு வெளியே
கிளம்பும் பெண்கள் அவர்களையே சார்ந்திராமல் தம்
கையிலும் தேவைக்கேற்ப பணம் எடுத்து செல்வது
தர்மசங்கடமான வேளைகளில் கை கொடுக்கும்.

Friday, February 4, 2011

கிராமிய சுற்றுலா




இந்தக் கோடையில் என் தங்கையின் ஊரான
ஊசூர் கிராமத்துக்கு நானும்,பெங்களூருவில்
வசிக்கும் என் அக்காவும் பிள்ளைகளோடு
சென்றிருந்தோம்.அந்தக் கிராமமும்,அதன்
பழக்க வழக்கங்களும் எங்கள் குட்டீஸ்களுக்கு
மறக்க முடியாத அனுபவங்களைப் பரிசளித்து
அனுப்பி வைத்துள்ளது!

ஆம்... நாற்று வளர்ந்து நெல்லாகி,
நெல்லிலிருந்து அரிசி கிடைப்பதை கதையாகப்
படித்திருந்த என் பத்து வயது மகள்,பச்சை
போர்த்திய வயல்வெளிகளில் அதை பிராக்டிகலாக
கண்கள் விரியப் பார்த்தாள்.மார்க்கெட்டில்
மட்டுமே காய்கறிகளைப் பார்த்த அவர்கள்,
தோப்பில் சுற்றிய போது,’ஐ...தக்காளி செடி’,
கறிவேப்பிலை செடி’,’பச்சை மிளகாய் செடி’,’
’மாமரம்’ என அங்கிருந்த செடிகளையும்,
மரங்களையும் பார்த்தும்,பறித்தும்,சுவைத்தும் அக
மகிழ்ந்தனர்.பாக்கெட் பாலை மட்டுமே அறிந்திருந்த
அவர்கள், என் தங்கை வீட்டிலிருந்த இரு
பசுமாடுகளின் காம்புகளிலிருந்து பால்காரர் பால்
கறந்ததை உலக அதிசயம் போல் மெய்மறந்து பார்த்தார்கள்.
எதிர்ன் வீட்டில் செய்த மண்பானைகளை இமைக்காமல்
பார்த்து ரசித்தார்கள்.

இயற்கையாக்க கிடைக்கும் பொருட்களையே
விளையாட்டுப் பொருட்களாக மாற்றி விளையாடும்
கெட்டிக்கார கிராமத்துக் குழந்தைகளுடன் சேர்ந்து
பனங்காயை நடைவண்டியாக்கியும்,தென்னை ஓலைக்
கீற்றில் பொம்மைகள் செய்தும்.களி மண்ணில் சட்டி
பானை செய்தும் அசத்தினர்.சாணத்தில் இருந்து
வரட்டி தட்டியதையும், தென்னை ஓலையில் இருந்து
விளக்கமாறு சீவியதையும் அவர்கள் படித்துக்
கொண்டிருக்கும் சயின்ஸ் பாடங்களை மீறிய
ஆச்சரியத்தோடு பார்த்தார்கள்!எல்லாவற்றையும்விட
அங்கிருந்த நட்களில் அவர்கள் டி.வி.யையே
மறந்து போனது எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இனி,சமயம் கிடைக்கும் போதெல்லாம்
அவர்களை கிராமத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும்
என முடிவெடுத்துக் கொண்டோம் நானும் என்
அக்காவும்!