Banner

என் அன்பான கணவருடன்
'பிடிக்குள் அடங்கா மெளனம்' புத்தக வெளியீட்டில் VIT வேந்தர்
சிறந்த நூலாசிரியருக்கான தமிழக அரசின் விருது
சாதனை பெண்கள் விருது 2020
VIT வேந்தரிடம் பெற்ற தமிழன்னை விருது
Guest motivational speech in Bharathi college

Saturday, May 10, 2014

வெயில்



வெறித்துப் போன வீதியிலே
விரித்து போட்ட பாலைவனமாய்
தன் முத்திரையை கோலோச்சி
புவனம் ஆள்கிறது வெயில்

பருத்த கொடுங்கோல் அரக்கனாய்
பிசுபிசுத்த ஈர நாக்கு விரித்து
கசகசப்புக்கிடையே பூமியை சுட்டெரிப்பினும்
நெகிழ்ச்சியான தருணங்களுக்கும் இங்கு இடமுண்டு

கத்திரி வெண்டை என
கண்ணில் படுபவற்றையெல்லாம்
வற்றலாக்கும் கலையில்
ஆழ்ந்திருக்கிறாள் அம்மா

விடுமுறையில் கொட்டமடித்தபடி
சொந்தங்களை வாசல்
பார்த்து வரவேற்று
உறவு பாலம் அமைக்கிறது வாண்டுகள்

பிள்ளைகள் படிப்பின்பால்
கிடைக்கும் தற்கால இளைப்பாறலில்
தேர் திருவிழாக்களில்
அசைந்தாடுகிறது பெண்மையின் மனம்

தர்பூசணியும் வெள்ளரியும்
பலாக்காயும் முலாம்பழமும்
குளுகுளுப்பிகளாய் வயிற்றை நிறைத்து
சண்டையிடுகின்றன மாங்காய்பிஞ்சுடன்

சுற்றுலா எண்ணத்தை
காய்ச்சி மனதினுள்
ஊற்றுகிறது வெக்கை
வியர்வை ஊற்றுக்கிடையே

தாமரை மலர்கள்
வைகறை தொட்டே
வெடித்து சிரிக்கிறது
தன் காதலனை பார்த்து

தண்ணீரை அனுபவித்து அருந்தியும்
மத்திம கால தம் பணிகளுக்கு
விடுப்பு விடுத்தும்
ஓய்வெடுக்கிறார் தாத்தா

தொடர் மழையை
வையும் சாபக்கேட்டின்
பிடி விலகுவது
கோடையில் மட்டுமே

தகிக்கும் நெருப்பாக மட்டுமின்றி
வசந்தத்தின் பெரு நதியாகவும்
திகழ்கிறது வெயில்
யதார்த்தத்தின் வாயிலில் நின்றபடி

வெக்கையின் ஈர நினைவுகள்
மூளைக்குள் தேங்கி குளிர
பெய்யென பெய்கிறது
மனதிற்குள் பெருமழை

பதிவுகளின் சாட்சியாய்
வரலாற்றின் நீட்சியோடு
நம்பிக்கையை நீர் கொண்டு
நெஞ்சில் விதைக்கிறது வெயில்
நினைவுகளை கட்டவிழ்த்தபடி...

தமிழன் டி.வி. கவியரங்கில் வெயில் குறித்து நான் வாசித்த கவிதை

4 comments:

  1. //தமிழன் டி.வி. கவியரங்கில் வெயில் குறித்து நான் வாசித்த கவிதை//

    மகிழ்ச்சி.

    அருமையான வெயில். பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. தங்களின் சுறுசுறுப்புக்கு என் சூடான நன்றிகள்

    ReplyDelete
  3. அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. நன்றி திண்டுக்கல் சார்

    ReplyDelete